ஐ.நா. சபையில் பாலஸ்தீன இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி - மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை


ஐ.நா. சபையில் பாலஸ்தீன இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தோல்வி - மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 7 Dec 2018 10:45 PM GMT (Updated: 7 Dec 2018 8:45 PM GMT)

ஐ.நா. சபையில் பாலஸ்தீன இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.

நியூயார்க்,

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் செல்வாக்கு மிக்க இயக்கமாக உள்ளது. இஸ்ரேலை மீட்டு, பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காசா பகுதிகளுடன் இணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நோக்கத்துடன் இந்த இயக்கம் போராடி வருகிறது. இந்த இயக்க போராளிகள் சமீப காலமாக பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை இந்த ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருதுகின்றன.

இந்தநிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்க போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் நிறைவேற மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டு போட வேண்டும். ஆனால் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஓட்டெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 87 உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். எதிராக 57 பேர் ஓட்டு போட்டனர். 33 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். எனவே மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த தீர்மானம் நிறைவேறாமல் தோல்வி கண்டது. இது அமெரிக்காவுக்கு ஐ.நா. சபையில் பின்னடைவு ஆகும். இது வரலாற்று பிழை என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே கருத்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஹமாஸ் செய்தி தொடர்பாளர், “இந்த ஓட்டெடுப்பு முடிவு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு விழுந்த அடி” என குறிப்பிட்டார்.

ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ, “மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெற முடியாவிட்டாலும் கூட, பெரும்பாலான நாடுகள் ஹமாசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து நின்றுள்ளன” என குறிப்பிட்டார்.



Next Story