விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் - லண்டன் சட்ட நிறுவனம் கருத்து


விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் - லண்டன் சட்ட நிறுவனம் கருத்து
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 9:32 PM GMT)

விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் என லண்டன் சட்ட நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

லண்டன்,

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு பற்றி லண்டன் நகரில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்” என்றார்.

இந்தநிலையில் தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மேல் முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. எனினும் தனது அடுத்த திட்டம் என்ன என்பதை அவர் இதுவரை உறுதி செய்யவில்லை.


Next Story