பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்


பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Dec 2018 6:47 AM GMT (Updated: 12 Dec 2018 6:47 AM GMT)

பிரான்சில் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் 3 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பியோடி உள்ளார்.

ஸ்டிராஸ்போர்க்,

பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் நெருக்கடி நிறைந்த சாலையில் ஒரு மர்ம நபர்  துப்பாக்கி ஏந்தியபடி வந்துள்ளார்.  அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதனால் பாதுகாப்பு தேடி அங்கிருந்து மக்கள் தப்பித்து ஓடினர்.  சிலர் உள்ளூர் விடுதிகள், பார்களுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.  இதனை அடுத்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள் மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்த அந்த நபர் போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கான கண்காணிப்பு பட்டியலில் அந்த நபர் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தினை அடுத்து கிறிஸ்துமஸ் சந்தையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் நேற்றிரவு சீல் வைக்கப்பட்டன.  அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

Next Story