இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே


இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே
x
தினத்தந்தி 16 Dec 2018 6:04 AM GMT (Updated: 16 Dec 2018 6:04 AM GMT)

இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கொழும்பு,

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார்.

இதனால் இலங்கை அரசியலில் வரலாறு காணாத குழப்பம் நிலவியது. இதனால் சிறிசேனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

இந்த வழக்கில் கடந்த 13-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது. இதைப்போல ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான மந்திரி சபை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட கோர்ட்டு உத்தரவையும் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை அரசியலில் மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். ரனில் விக்ரமசிங்கேவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பின், ரனில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தை காக்க போராடிய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Next Story