நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்


நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2018 6:31 AM GMT (Updated: 22 Dec 2018 7:31 AM GMT)

அமெரிக்காவில் அரசின் செலவின நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை  ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்காக டிரம்ப், 5 பில்லியன் தொகையை கோரியிருந்தார். ஆனால், டிரம்ப் கோரிக்கைக்கு செனட் சபையில் எதிர்ப்பு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக நிர்வாக முடக்கம் (ஷட் டவுன்) நிகழ்ந்துள்ளது.  நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை.  எனினும், சனிக்கிழமை பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம், நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ''நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது” என கூறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் நிர்வாக முடக்கம் 4-வது முறையாக ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

Next Story