பிரான்சில் விடுதியில் தீ; 2 பேர் உடல் கருகி சாவு


பிரான்சில் விடுதியில் தீ; 2 பேர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 21 Jan 2019 10:00 PM GMT (Updated: 21 Jan 2019 7:25 PM GMT)

பிரான்சில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி பலியாயினர்.

பாரீஸ்,

பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழமையான விடுதி ஒன்று உள்ளது. மரத்தால் ஆன 3 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு விடுதியில் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. விடுதியில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு வெளியேறினர்.

சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்ததும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

தீ விபத்தில் படுகாயம் அடைந்த 25 பேர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


Next Story