2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்


2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 5 Feb 2019 7:12 AM GMT (Updated: 5 Feb 2019 7:12 AM GMT)

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் 2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

அம்பாறை

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில்  நடமாடி வரும்  2 அடி குள்ள நபரால் மக்கள் கடும் அச்சம் அடைந்து  உள்ளனர். இந்த பகுதியில் வயல்களுக்கு பல முறை இந்த  நபர் வந்து சென்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2-ம் தேதி தனது சோள பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்பவர் குள்ள நபரை பார்த்ததும் பயத்தில் வீட்டுக்கு ஓடி உள்ளார். அருகிலுள்ள விவசாயிகளை அழைத்து கொண்டு  மீண்டும் அந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது குள்ள மனிதர் மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் கடந்த 2-ந் தேதி  இரவு பயிர்களை  பார்வையிடுவதற்காக வந்தேன். வந்த இடத்தில் எனக்கு வினோத சத்தம்  கேட்டது. நான் எழுந்து லைட் அடித்து பார்க்கும்போது 2 அடியில் ஒரு நபர் நின்றார். தலைமுடி நீளமாக காணப்பட்டது. முகம் சிவப்பு நிறமாகவும்,  உள்நோக்கி சென்றது போன்று காணப்பட்டது. உதடுகளும் சிவப்பு நிறமாக காணப்பட்டன. 

நான் லைட் ஒளியை அவரது முகத்தில் அடித்து சத்தமிட்டேன். எனினும் அந்த நபர் சிறிதும் நகரவில்லை. பின்னர் நான் பயந்து ஓடி விட்டேன். அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்தேன். ஆனால் அந்த நபரை காணவில்லை. குள்ள மனிதர் வந்து சென்றதற்கான பாதச் சுவடுகள் அங்கு காணப்பட்டன என கூறினார்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து ஆராய்ந்த அதிகாரிகள் அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குள்ள மனிதர் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டு உள்ளது.

Next Story