வெளிநாடு செல்ல முயன்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
வெளிநாடு செல்ல முயன்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானி அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி. அவர் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்கொரியாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதற்காக லாகூர் நகரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு சென்றுள்ளார்.
அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரது பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது. அதனால் நாட்டை விட்டு அவர் வெளியேற முடியாது என உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு அவரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனது பெயர் கருப்பு பட்டியலில் இடம்பெற எந்த விசயமும் இல்லை. நான் நாட்டை விட்டு தப்பியோடவில்லை. தனது அரசியல் எதிரிகளை தாக்குவது ஒன்றையே பிரதமர் இம்ரான்கான் கொள்கையாக வைத்திருக்கிறார் என்பது போன்று தெரிகிறது என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான கிலானி கூறியுள்ளார். கிலானி அந்நாட்டில் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார்.
Related Tags :
Next Story