ரஷியாவில் பரபரப்பு: குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பனிக்கரடிகள் - அவசர நிலை பிரகடனம்


ரஷியாவில் பரபரப்பு: குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பனிக்கரடிகள் - அவசர நிலை பிரகடனம்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:00 PM GMT (Updated: 11 Feb 2019 8:21 PM GMT)

ரஷியாவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பனிக்கரடிகள் வர தொடங்கி உள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ, 

ரஷியாவின் வடக்கு பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது நோவாயா செம்லியா தீவுக் கூடம். இந்த தீவுக்கூடத்தின் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் பனிக்கரடிகள் வசித்து வந்தன.

தற்போது அங்கு அதிக பனி காரணமாக மீன்கள் உள்ளிட்ட சில உயிரினங்கள் இடம் பெயர்ந்துவிட்டதால் உணவு கிடைக்காமல் பனிக்கரடிகள் தவிக்கின்றன. இதனால் உணவை தேடி பனிக் கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன.

ஆர்க்கான்கெலஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெல்ஷியா குபா நகரில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் சுற்றித் திரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிக்கரடிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதோடு அங்கு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கரடிகளை விரட்டி அடிக்கவும் ராணுவவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.


Next Story