பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயார் - சர்வதேச நிதியம் தகவல்


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயார் - சர்வதேச நிதியம் தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:30 PM GMT (Updated: 11 Feb 2019 8:42 PM GMT)

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது.

அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது.

இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும்.

அது மட்டுமின்றி இந்த தொகை, 7 வார கால இறக்குமதிக்குத்தான் பாகிஸ்தானுக்கு போதுமானதாக உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன.

இந்த நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு சீனா 2.5 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.17ஆயிரத்து 750 கோடி) சவுதி அரேபியா 6 பில்லியன் டாலரும் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவியாக வழங்க முன்வந்தன. எனினும் பாகிஸ்தான் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சூழல் இன்னமும் வரவில்லை.

இந்த நிலையில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றுள்ளார். அவர் இந்த மாநாட்டுக்கு மத்தியில் ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டேவை சந்தித்து பேசினார். இது குறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களை மோற்கொள்வதில் இருவருக்கும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த சீர்திருத்தங்கள் நாட்டை நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும். பாதிப்படைந்துள்ள துறைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்” என்றார்.

அதே போல் இந்த சந்திப்பு தொடர்பாக ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானை பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்க அந்நாட்டிற்கு உதவ ஐ.எம்.எப். தயாராக உள்ளது. இதற்காக தீர்க்கமான மற்றும் வலுவான கொள்கைகளை வகுத்து கூடுதல் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story