பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு 1 ஆண்டு சிறை


பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு 1 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 8:55 PM GMT)

பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில், போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாரீஸ்,

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. வார இறுதிநாட்களில் மட்டும் நடைபெற்ற இந்த போராட்டம் மஞ்சள் அங்கி போராட்டம் என்று அழைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்தன. அந்த வகையில் கடந்த மாதம் 5-ந் தேதி தலைநகர் பாரீசில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான கிறிஸ்டோபர் டிட்டிங்கர் (வயது 39) போலீசாரை சரமாரியாக தாக்கினார். இதனால் மக்கள் மத்தியில் கதாநாயகனாக உருவெடுத்தார்.

ஆனால் கிறிஸ்டோபர் டிட்டிங்கர் தனது தவறை உணர்ந்து போலீசில் சரணடைந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் கிறிஸ்டோபர் டிட்டிங்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற வக்கீல்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, கிறிஸ்டோபர் டிட்டிங்கர் பகல் பொழுது முழுவதையும் வெளியே கழிக்கலாம் என்றும், இரவில் மட்டும் சிறைவாசம் அனுபவித்தால் போதும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story