புல்வாமா தாக்குதல்; இந்தியாவும்- பாகிஸ்தானும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் - அமெரிக்கா


புல்வாமா தாக்குதல்; இந்தியாவும்- பாகிஸ்தானும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் - அமெரிக்கா
x
தினத்தந்தி 20 Feb 2019 6:13 AM GMT (Updated: 20 Feb 2019 6:13 AM GMT)

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து விசாரணையை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம் என்றும், விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில், இந்திய துணை ராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப்  கூறியதாவது;-

‘ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம். அங்கு நிலவும் சூழலை நான் தொடர்ந்து அறிந்து வருகிறேன். அது தொடர்பாக ஏராளமான விவரங்களும் வந்துள்ளது. நாங்கள் சரியான நேரத்தில் இது குறித்து எங்களின் கருத்தை தெரிவிப்போம். அதே சமயம் இந்தியாவும், பாகிஸ்தானும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இணைந்து விசாரணையை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறையின் இணை செய்தி தொடர்பாளரான ராபர்ட் பல்லாடினோ, தீவிரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு தான் தங்களது ஆதரவு என்று உறுதிபடக் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story