பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிநீரை தடுத்து நிறுத்தினால் கவலைப்பட மாட்டோம் - பாகிஸ்தான்


பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிநீரை தடுத்து நிறுத்தினால் கவலைப்பட மாட்டோம் - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 22 Feb 2019 9:46 AM GMT (Updated: 22 Feb 2019 10:52 AM GMT)

கிழக்கில் இருந்து பாகிஸ்தான் நோக்கிப் பாயும் பியாஸ், ராவி, சட்லெஜ் நதி நீரை இந்தியா தடுத்தாலும், திசை மாற்றினாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கராச்சி

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி  தற்கொலை தாக்குதல் நடத்தினான்.  இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்தநிலையில், இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கவாஜா சுமெயில், டான்நியூஸ்க்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கிழக்கு நோக்கி பாகிஸ்தானுக்குள் பாயும் பியாஸ், ராவி, சட்லஜ் நதிகளை இந்தியா தடுத்து நிறுத்தினாலும் சரி, அல்லது மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேறு பக்கம் திருப்பினாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா மதிக்காவிட்டாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம்.

ஆனால், மேற்கு நோக்கிப் பாயும் சீனப், சிந்து, ஜீலம் நதிநீரை தடுத்தால், வேறுபக்கம் திருப்பினால், நிச்சயம் எங்களுடைய கவலைகளை, எதிர்ப்பைத் தெரிவிப்போம் " எனத் தெரிவித்தார்.

சிந்து நதிநீரின் பாகிஸ்தானுக்கான ஆணையர் சயத் மெஹர் அலி ஷா கூறுகையில், " கடந்த 1960-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கிழக்குநோக்கி பாயும் நிதிகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ளச் சிந்து நதிநீர் ஒப்பந்தம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த நதிநீரை பயன்படுத்தினாலும் சரி அல்லது திருப்பிவிட்டாலும் எங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை " எனத் தெரிவித்தார்.

Next Story