பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியாவால் முடியாது: பாக்.வெளியுறவுத்துறை மந்திரி அடாவடி


பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியாவால் முடியாது:  பாக்.வெளியுறவுத்துறை மந்திரி அடாவடி
x
தினத்தந்தி 26 Feb 2019 3:44 AM GMT (Updated: 26 Feb 2019 3:44 AM GMT)

பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்,

கடந்த 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியா, அந்நாட்டை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் தொடர்பாக நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரேசி, பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வர உள்ளனர். பாகிஸ்தான்  அணி வகுப்பு நாளான மார்ச் 23 ஆம் தேதி, சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மகாதீர்  முகம்மது வர இருக்கிறார்.

அதேபோல், ஜெர்மன் மந்திரி ஹீகோ மாஸ் மார்ச் 12 ஆம் தேதி பாகிஸ்தான் வர உள்ளார். ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார் எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. மும்பை தாக்குதலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததோ ,அதே நிலைப்பாட்டை தான் தற்போதும் எடுத்துள்ளது.  புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதேவேளையில், இந்தியா தாக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயங்காது” என்றார். 


Next Story