எத்தியோப்பியா விமான விபத்து; போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தடை செய்ய இங்கிலாந்து முடிவு


எத்தியோப்பியா விமான விபத்து; போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தடை செய்ய இங்கிலாந்து முடிவு
x
தினத்தந்தி 12 March 2019 3:09 PM GMT (Updated: 12 March 2019 3:09 PM GMT)

எத்தியோப்பியா விமான விபத்தினை அடுத்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தடை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

லண்டன்,

எத்தியோப்பியாவில் கடந்த 10ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர்.

இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர். இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன.

எத்தியோப்பியாவில் விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு முன்னதாக விமானி விமானத்தை செலுத்த சிரமமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் விமானத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனையடுத்து  போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது.

எத்தியோப்பியா, சீனா உள்ளிட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க அந்நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது '1,000 மணி நேரம்' அனுபவம் வேண்டும், துணை விமானிக்கு '500 மணி நேரம்' அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

எத்தியோப்பியா விமானத்தின் கருப்பு பெட்டியை நிபுணர்கள் இன்று கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்நிலையில், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை தொடர்ந்து இங்கிலாந்து நாடும் இந்த ரக விமானங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், போயிங் 737 மேக்ஸ் விமானம் என தலைப்பிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்து வான்வெளியில் இந்த ரக வர்த்தக பயணிகள் விமான இயக்கத்தினை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

Next Story