‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வி - அடுத்தது என்ன?


‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வி - அடுத்தது என்ன?
x
தினத்தந்தி 13 March 2019 11:30 PM GMT (Updated: 13 March 2019 7:54 PM GMT)

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்ததால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவானது.

அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.

ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெனில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டபோதிலும், எந்த மாதிரியான முன்னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார். ஆனால் இங்கிலாந்து எம்.பி.க்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

தெரசா மே அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதியானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை கொண்டுவந்தார். இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50-ன் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார்.


Next Story