போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை


போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 March 2019 1:18 AM GMT (Updated: 14 March 2019 1:18 AM GMT)

கடுமையான அழுத்தங்களை தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

எத்தியோப்பியாவில் கடந்த 10-ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர்.

இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது. இந்தியா, எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர்,  பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், போயிங் 777 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.


Next Story