பாக்.தேசிய தினத்தை முன்னிட்டு இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம்


பாக்.தேசிய தினத்தை முன்னிட்டு இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம்
x
தினத்தந்தி 23 March 2019 3:07 AM GMT (Updated: 23 March 2019 3:07 AM GMT)

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்துக்கடிதத்தில், தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில்,ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். மேலும், மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண  விரிவான ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளதாகவும்  தனது டுவிட்டில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ள சூழலில், பிரதமர் மோடி, இம்ரான் கானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.  நேற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததால், கோபம் அடைந்த இந்தியா அந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருந்தது. இந்த சூழலில் தான், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். 

இந்தியா தூதரக உறவுகள் வைத்துள்ள நாடுகளின் தேசிய தினத்திற்கு, நாட்டின் பிரதமர் வாழ்த்துச்செய்தி அனுப்புவது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில்தான் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி, வழக்கமான வாழ்த்துச்செய்தியை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட வாழ்த்துச்செய்தியில், பிரதமர் மோடி கையெழுத்திடவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story