அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா? விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்


அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா? விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 24 March 2019 12:15 AM GMT (Updated: 23 March 2019 7:00 PM GMT)

அமெரிக்க தேர்தலில் தலையிட்டு, டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை முடிந்து உள்ளது. நீதித்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வாஷிங்டன், 

அமெரிக்க நாட்டில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் கண்ட ஹிலாரி தோல்வி அடையவும் ரஷியா உதவியது என்ற புகார் எழுந்தது.

குறிப்பாக ரஷிய ஏஜெண்டுகளும், அங்கு அதிகாரத்தில் இருந்தவர்களும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தகவல்களை பெற்றனர்; ஜனநாயக கட்சியினரின் இ–மெயில்களை இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து திருடி கசிய விட்டு, ஹிலாரியின் பிரசாரத்தை பலவீனப்படுத்தினர் என கூறப்பட்டது.

இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையை ஜனாதிபதி டிரம்பும், குடியரசு கட்சியினரும் சூனிய வேட்டை என விமர்சித்தனர். அத்துடன் முல்லர் விசாரணை குழு முன் அமர முடியாது என்று டிரம்ப் கூறினார்.

அதே நேரத்தில், பல மாதங்கள் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் விசாரணை குழு அனுப்பிய கேள்விகளுக்கு அவரது வக்கீல்கள் பதில் அளித்தனர்.

இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முல்லர் குழுவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், விசாரணை அறிக்கையை நீதித்துறையின் உயர் அதிகாரிகளிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் நேரில் தாக்கல் செய்ததாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த அறிக்கை பற்றி நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ராபர்ட் முல்லர் அறிக்கையில் கூடுதலாக எந்த குற்றச்சாட்டும் பரிந்துரை செய்யப்படவில்லை’’ என கூறினார்.

ஏற்கனவே முல்லர் விசாரணையின்போது, ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் உதவியாளர்கள் 6 பேர் மீதும், ரஷியர்கள் பலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லரின் அறிக்கையை அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் பரிசீலித்து, எந்தளவுக்கு இதை நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வது என்பதை முடிவு செய்வார்.

இதையொட்டி வில்லியம் பார் கூறும்போது, ‘‘நான் துணை அட்டார்னி ஜெனரல் ரோசன்ஸ்டெயினுடன் ஆலோசனை நடத்துவேன். முடிந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்வேன்’’ என கூறினார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ராபர்ட் முல்லர் விசாரணை குழு அறிக்கை விவகாரத்தில் அட்டார்னி ஜெனரல் பார் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வார். சட்டப்படி எல்லாம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். அறிக்கையின் அம்சங்கள் பற்றி வெள்ளை மாளிகைக்கு யாரும் கூறவில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் வக்கீல்கள் ரூடி ஜியுலானி, ஜெய் சுகுலோவ் கூறும்போது, ‘‘ராபர்ட் முல்லர் குழு அறிக்கையை தாக்கல் செய்து விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கையை அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் முடிவு செய்வார் என நம்புகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே ராபர்ட் முல்லர் அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் என ஜனநாயக கட்சி குரல் கொடுத்துள்ளது.


Next Story