இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி


இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி
x
தினத்தந்தி 29 March 2019 4:54 PM GMT (Updated: 29 March 2019 4:54 PM GMT)

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது. #TheresaMay #Brexit #UKParliament

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
 
மேலும், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.

‘பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் இங்கிலாந்து வெளியேறியாக வேண்டும்’ என்று டொனால்டு டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்ஸிட் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்.பி.க்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது.  இன்று பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.

மூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story