உலகைச்சுற்றி...
* சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாப் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசியதில் அப்பாவி மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் 15-ந் தேதி பயங்கரவாதி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வில்லியம் யங் தலைமையில் வலிமைமிக்க நீதி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
* சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, கடந்த ஆண்டு அக்டோபரில் துருக்கியில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சவுதியைச் சேர்ந்த 16 பேர், தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
* ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ஹாடிதா நகரில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் பலியாகினர். அதே சமயம் சாலாலுதின் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசியதில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.
Related Tags :
Next Story