கருந்துளை படம் முதல் முறையாக வெளியிடபட்டது


கருந்துளை படம் முதல் முறையாக வெளியிடபட்டது
x
தினத்தந்தி 11 April 2019 5:46 AM GMT (Updated: 11 April 2019 5:46 AM GMT)

விண்வெளி ஆய்வாளர்களால் கருந்துளையின் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.


பிக் பேங்க் தியரி (Big Bang theory) எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இந்த உலகம் உருவானதாக அறிவியல் கோட்பாடு கூறுகிறது. ஆனால், அதற்கு முன்பாக இந்த அண்டம்  எப்படி உருவாகியிருக்கும் என்று கேட்பவர்களுக்கு, பதிலாக சொல்லப்பட்ட மற்றொரு கோட்பாடு, கருந்துளையில்  (Black Hole) இருந்து தான் அண்டம் உருவானது என்று.

உலகளவில் பிரபல விஞ்ஞானியாக அறியப்பட்ட மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங், கருந்துளை பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். ஆனால், இவை அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதா? என்று யாராலும் கேட்க முடியாது. ஏனென்றால், கருந்துளை என்பதே கற்பனையான ஒரு விஷயமாகவே இருந்து வந்தது.

கருந்துளைகள் விண்வெளி ஆய்வாளர்களால்  எந்த நவீன கருவிகளைப் பயன்படுத்தியும்,  இதுவரை  கருந்துளைகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. கருந்துளை என்றுமே ஒரு புரியாத புதிராக, மர்மமாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும், கருந்துளைகளை ஆய்வு செய்து அவற்றை புரிந்துகொள்ள முயலும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் தொடர்கின்றன.

அண்டத்தில் கருந்துளை என்பது இருப்பதாக அறிவியலாளர்கள் கூறினாலும், அது என்ன வடிவத்தில் இருக்கும் என்று யாராலும் 100 சதவீதம்  உறுதியாக கூற முடியவில்லை. ஏனென்றால், பால்வீதியில் எத்தனையோ கோடி ஒளி மைல்கள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை தொலைநோக்கிகள் மூலம் புகைப்படம் எடுத்து தள்ளிய மனித குலத்திற்கு, கருந்துளையை புகைப்படம் எடுப்பது என்பது சாத்தியமற்ற காரியமாகவே இருந்தது. 

கருந்துளைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், அதைச் சுற்றியுள்ள சூழலை கண்காணிக்கவும் கடந்த 2012ஆம் ஆண்டு ஹாரிசான் தொலை  நோக்கி (EVENT HORIZON TELESCOPE) எனப்படும்  திட்டத்தை நாசாவுடன் இணைந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று அமைத்தது. ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் புவியீர்ப்பு விசை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மிக சக்தி வாய்ந்தது என்பதால் இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவர முடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டு விடும். இதன் காரணமாக கருந்துளையை படம்பிடிக்க முடியாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. 

2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த  திட்டத்தின் கீழ், ஹவாய், அரிசோனா, ஸ்பெயின், மெக்சிகோ, அண்ட்டார்டிகா, சிலி உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கி ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ டெலஸ்கோப்களை பயன்படுத்தி, ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதன் முடிவில் 2 கருந்துளைகளை கண்டு பிடித்துள்ளனர். இதில் முதல் கருந்துளை ‘சாகிட்டாரிஸ் ஏ’ எனும் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கருந்துளை எனவும், மற்றொன்று, விர்கோ விண்மீன் மண்டலத்தில் M87 கோள்களுக்கு மையத்தில் இருக்கும் கருந்துளை என்றும் தெரிவித்துள்ளனர்.

கருந்துளையின் புவிஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவர முடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டு விடும். அளவில் சிறிதாக இருக்கும் ஒரு கருந்துளை, பெரும் சூரியனை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரை கற்பனையின் அடிப்படையில் illusion  படமாகவே காட்டப்பட்ட கருந்துளையின் உண்மையான வடிவம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இதில் ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், ஒளியாக இருந்தாலும் கூட கருந்துளைக்கு உள்ளே சென்று விட்டால், வெளியே வர முடியாது என்று கூறப்பட்ட நிலையில், அதே ஒளிதான் கருந்துளையை அடையாளம் காட்டியிருக்கிறது. புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ள கருந்துளையை சுற்றியிருக்கும் ஒளிவட்டம், உள்ளே இழுக்கப்படும் வாயு, உச்சபட்ச வெப்பத்தில் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். 


Next Story