டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி


டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி
x
தினத்தந்தி 18 April 2019 10:30 PM GMT (Updated: 18 April 2019 5:25 PM GMT)

டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது.

சியோல், 

ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா.

உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தைகளால் யுத்தம் நடத்தினர்.

முதல் சந்திப்பு 

இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா–தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர்.

அதனை தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்கா–வடகொரியா இடையே சமாதானத்தை ஏற்படுத்தம் முயற்சிகளை முன்னெடுத்தார். இதன் பயனாக உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.

இணக்கமான சூழல் 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்புக்கு பிறகு, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.

எனினும் வடகொரியா அணு ஆயுதங்கள் அனைத்தையும் முழுமையாக கைவிட்டுவிட்டு, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. அதே சமயம் தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வடகொரியா கோரிக்கை வைத்தது.

3–வது சந்திப்பு? 

இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக டிரம்பும், கிம் ஜாங் அன்னும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2–வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கிம் ஜாங் அன்னை 3–வது முறையாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இந்த சந்திப்பு சாத்தியமாகும் என கிம் ஜாங் அன்னும் கூறினார்.

கிம் ஜாங் அன் ஆய்வு 

இந்த நிலையில், வடகொரியா அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை நேற்று முன்தினம் சோதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘நிலம், கடல் மற்றும் விமானத்தில் இருந்து செலுத்தும் வகையிலான ஆற்றல் மிக்க ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஆயுதம் பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கும் வகையில் 


எனினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயுதம் அணு ஆயுத வகையை சேர்ந்ததா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தை சார்ந்ததா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே சமயம் இது ஒரு குறுகிய தொலைவிலான ஆயுதம் என வடகொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில் வடகொரியா புதிய ஆயுத சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இந்த சோதனையை நடத்தி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Story