இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்; அதிபர் சிறிசேனா


இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்; அதிபர் சிறிசேனா
x
தினத்தந்தி 21 April 2019 6:44 AM GMT (Updated: 21 April 2019 6:44 AM GMT)

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா மக்களிடம் கேட்டு கொண்டார்.

கொழும்பு,

கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட சென்றனர்.  இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் இன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.

இதில், கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமடைந்தன.

இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.  இந்த சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.  300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.  இலங்கை அதிபர் சிறிசேனா வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.  இதனால் குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரையாற்றி உள்ளார்.  அதில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.  விரைவில் இதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிபர் சிறிசேனா பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.  இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story