23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த நேபாளி


23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த நேபாளி
x
தினத்தந்தி 15 May 2019 9:37 AM GMT (Updated: 15 May 2019 9:37 AM GMT)

நேபாள நாட்டின் ரீட்டா ஷெர்பா 23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்து உள்ளார்.

காத்மண்டு,

நேபாள நாட்டின் மலையேற்ற குழுவை சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 49).  இவர் சொலுகும்பு மாவட்டத்தின் தேம் கிராமத்தில் வசித்து வருகிறார்.  8,850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த 1994ம் ஆண்டில் ஏற தொடங்கினார்.

ஆனால் அடுத்த வருடம் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்தனர்.  இதனால் மலையேறும் முயற்சியை காமி அந்த ஆண்டில் கைவிட்டார்.

ஆனால் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட காமி தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.  இதன் பலனாக கடந்த 2017ம் ஆண்டில் 21 முறை இச்சிகரத்தில் ஏறிய நபர் என்ற பெருமையை பெற்றார்.  இதனால் அபா ஷெர்பா மற்றும் பூர்பா டஷி ஷெர்பா ஆகியோரின் சாதனை சமன் செய்யப்பட்டது.  இவர்கள் இருவரும் மலையேற்றத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு காமி இந்த சாதனையை முறியடித்து அதிக முறை மலையேறிய நபர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.  தொடர்ந்து இந்த வருடமும் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டார்.  இதன்படி இன்று காலை மற்ற ஷெர்பாக்களுடன் இணைந்து 23வது முறையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று தனது சொந்த சாதனையை முறியடித்து உள்ளார்.

Next Story