நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து வயிற்றை கிழித்து குழந்தை திருடிய கும்பல்


நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து வயிற்றை கிழித்து குழந்தை திருடிய கும்பல்
x
தினத்தந்தி 17 May 2019 7:23 AM GMT (Updated: 17 May 2019 7:23 AM GMT)

நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவை சேர்ந்த மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் (19) என்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண், கடந்த ஏப்ரல் 23ம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார்.அன்றைய தினம் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போன் செய்த 46 வயது பெண் ஒருவர், தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

உடனே விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.குழந்தை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், போன் செய்த அந்த பெண் குழந்தையின் இறுதிச்சடங்கிற்காக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது குழந்தையின் டி.என்.ஏ., போன் செய்த பெண்ணுடனும், அவருடைய கணவருடனும் ஒத்துப்போகவில்லை.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக போலீசார்  அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவருடைய வீட்டின் பின்பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சடலமாக கிடந்த பெண் மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் என்பதை அடையாளம் கண்டுகொண்டனர்.

உடனே சந்தேகத்தின் பேரில், 46 வயது பெண், அவருடைய கணவர், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிளாரிஸ்  (46), அவருடைய கணவர் பியோட்டர் போபாக் (40) மற்றும் மகள் டெசி பிகியூரோ  (24) ஆகியோர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து பெண் போலீஸ் அதிகாரி  ஒருவர் கூறுகையில், மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் தாய்மார்களால் இயக்கப்பட்டு வரும் ஒரு பேஸ்புக் குழு மூலம் இந்த பெண்ணை சந்தித்துள்ளார்.

குழந்தைக்கு தேவையான ஆடைகளை தருகிறேன் என அவர் கூறியதை கேட்டு மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய், இங்கு வருகை தந்துள்ளார். முதலில் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story