புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு: உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறது


புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு: உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறது
x
தினத்தந்தி 28 May 2019 11:15 PM GMT (Updated: 28 May 2019 7:27 PM GMT)

புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகின் செயல், உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகி வருகிறது.

டொராண்டோ,

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பைரோ. இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார்.

இவர் அண்மையில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்தார். அவர் அங்குள்ள பறவைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அப்போது, ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகு ஒன்றை புகைப்படம் எடுக்க தயார் ஆனார்.

பொதுவாக இதுபோன்ற புகைப்படங்களை எடுக்கிறபோது, பறவைகள் அந்த இடத்தில் இருந்து பறந்து சென்றுவிடும் அல்லது அப்படியே இருக்கும். ஆனால் ‘புரூஸ்’ கழுகு, ஸ்டீவ் பைரோ தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்தது, அவரை நோக்கி பறந்து வந்தது. நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும் தண்ணீரில் உரசியபடி ‘போஸ்’ கொடுப்பது போல நேர்த்தியாக பறந்து வந்தபோது, ஸ்டீவ் பைரோ அதனை தத்ரூபமாக படம் பிடித்தார்.

அதன் பின்னர் அவர் அந்த படத்தை ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் ஸ்டீவ் பைரோவுக்கு பெரும் பெயரும், புகழும் கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதை நான் இன்னும் அறியவில்லை” என்றார்.


Next Story