அமெரிக்கா: வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் பலி, 6 பேர் காயம்
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்,
ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானவர்கள் நவீன துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.
ஆனால் இதுவே அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சிலர், சக குடிமக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அங்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள வெர்ஜினியா பீச் பகுதி மிகவும் பிரபலமானதாகும். அங்குள்ள ஒரு கட்டிட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை பாரபட்சம் காட்டாமல் கண்மூடித்தனமாக சுட்டார்.
எதிர்பாராத இந்த துப்பாக்கிச்சூட்டால், அங்குள்ள மக்கள் அச்சத்துடன் அங்கும் இங்கும் ஓடினர். எனினும், இந்த துப்பாகிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு வந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய நபரையும் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்ன நோக்கத்திற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றி, இன்னும் வெளிவரவில்லை.
Related Tags :
Next Story