நிலவுக்கு பதில் வேறு பெரிய விசயங்களில் நாசா கவனம் செலுத்த வேண்டும்; அமெரிக்க அதிபர் டிரம்ப்
நாசா அமைப்பு நிலவுக்கு செல்வது பற்றி பேசாமல் வேறு பெரிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியொன்றில், நாம் செலவு செய்து வரும் அனைத்து நிதியையும் கொண்டு, நிலவுக்கு செல்வது பற்றி நாசா பேசி கொண்டிருக்க கூடாது. கடந்த 50 வருடங்களுக்கு முன்பே அதனை நாம் செய்து விட்டோம்.
அவர்கள் இதனை விட மிக பெரிய விசயங்களில் கவனம் செலுத்திட வேண்டும். செவ்வாய் கிரகம், பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் உள்பட என தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் டிரம்ப், விண்வெளி ஆய்வுக்காக கூடுதலாக 160 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை ஒதுக்குவதற்கான ஒப்புதல் வழங்க பரிசீலனை மேற்கொண்டு வருகிறேன். இதனால் விண்வெளிக்கு நாம் ஒரு பெரிய வழியில் திரும்ப முடியும்.
எனது நிர்வாகத்தில், நாசாவை மிக பெரிய உச்சத்திற்கு மீண்டும் கொண்டு வருவோம். நாம் நிலவுக்கும், பின்பு செவ்வாய் கிரகத்திற்கும் செல்வோம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story