ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை: அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை


ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை: அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை
x
தினத்தந்தி 8 Jun 2019 11:00 PM GMT (Updated: 8 Jun 2019 7:52 PM GMT)

ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், முகமது நூர்.

இவர் மினியாபோலிஸ் நகரில் 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது வாகனத்தை நோக்கி வந்த ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட் என்ற ஆஸ்திரேலிய பெண்ணை அவர் சுட்டுக்கொன்று விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட், தனது வீட்டின் பின்புறம் நடந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து புகார் செய்வதற்காக முகமது நூரின் வாகனத்தை நோக்கி சென்றதாகவும், ஆனால் அந்தப் பெண் தன்னையும், தன்னுடன் இருந்தவரையும் தாக்கத்தான் வருகிறாரோ என கருதி, முகமது நூர் சுட்டுக்கொன்று விட்டதாகவும் தெரிய வந்தது. இது தொடர்பாக முகமது நூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின்போது, ஆஸ்திரேலிய பெண்ணை அவர் சுட்டுக்கொன்றது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய பெண் ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட். சிட்னியை சேர்ந்தவர், இரட்டை குடியுரிமை பெற்றிருந்தவர், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்டு விட்டது அவருடைய குடும்பத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

இப்போது அவருடைய குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.140 கோடி) இழப்பீடு தரப்படும் என மினியாபொலிஸ் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் 2 மில்லியன் டாலரை (சுமார் ரூ.14 கோடி) துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story