பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:04 AM GMT (Updated: 12 Jun 2019 11:24 AM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டு நிராகரித்தது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு சென்ற இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிரவ் மோடிக்கு 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்டதால், லண்டன் ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 4-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவணங்களை அழிப்பதற்கு நிரவ் மோடி முயற்சிகளை மேற்கொள்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என கோர்ட்டு கூறியுள்ளது.

அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எந்த சிறையில்  அடைக்கப்படுவார், அங்குள்ள வசதிகள் என்ன என்று லண்டன் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மும்பை சிறை நிர்வாகம் மாநில உள்துறைக்கு ஒரு பதில் அனுப்பியுள்ளது. அதில், ஆர்தர் ரோடு சிறையில் 12–ம் எண் செல்லில் 2 அறைகள் உள்ளன. இதில் ஒன்று நிரவ் மோடிக்கு தயாராக உள்ளது. நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரையும் கூட அந்த ஒரே அறையில் அடைக்கலாம். 20 அடிக்கு 15 அடி கொண்ட அந்த அறையில் 3 மின்விசிறிகள், 6 டியூப் லைட்டுகள், 2 ஜன்னல்கள் உள்ளன. நிரவ் மோடிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 3 சதுர மீட்டர் இடம் கிடைக்கும்.

ஐரோப்பிய விதிகளின்படி அவருக்கு பருத்தி மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவை வழங்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்ச்சிக்காக அறைக்கு வெளியே அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story