பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்


பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:27 AM GMT (Updated: 17 Jun 2019 11:27 AM GMT)

பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போது சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது. இதனால் மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

 பாகிஸ்தானின் கிறிஸ்தவ குடும்பங்களைக் குறிவைக்கும் அவர்கள் பெரும் தொகையை கொடுத்து ஏஜெண்ட்கள் மூலம் பெண்களை திருமணம் செய்கின்றனர். இப்படி பல பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்கள் சீன ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர். சீனாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என கூறப்படும் பொய்யான கூற்றை கேட்டு பெற்றோர்களும் சம்மதிக்கிறார்கள். அங்கு சென்றதும்தான் சோகம் தொடர்கிறது. பாகிஸ்தானிய பெண்களுக்கு மொழி தெரிவது கிடையாது. அவர்கள் அங்கு அடிமைகளை போன்று நடத்தப்படுகிறார்கள். இதுதொடர்பான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது. இத்தகைய எல்லை மீறல்களை பாகிஸ்தான் மீது சீனா நடத்தும் மனிதக்கடத்தல் என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் பாகிஸ்தானிய மனித உரிமைகள் ஆர்வலர்கள். பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் நதாசா, சீனாவில் இருந்து போராடி மீட்கப்பட்டுள்ளார். அவர் பேசுகையில் என்னுடைய கணவர் என்னை பாகிஸ்தானில் இருந்து விலைக்கு வாங்கியதாக கூறினார். என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்றார். அங்கு பாலியல் பலாத்காரம் நடந்தது என கூறியுள்ளார். 

இதேபோன்று மீட்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள்,  விசாரிக்கும் அதிகாரிகளிடம் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும்  கூறுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் மறுக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண ஆர்வலர்கள் இதுபோன்ற கொடூரங்கள் அங்கு அரங்கேறியுள்ளது. இதற்கு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Next Story