‘அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது’ இதுதான் உங்களுக்கான பதில் -ஈரான் அதிரடி


‘அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது’ இதுதான் உங்களுக்கான பதில் -ஈரான் அதிரடி
x
தினத்தந்தி 20 Jun 2019 3:52 PM GMT (Updated: 20 Jun 2019 3:52 PM GMT)

தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து. இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன. ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது. ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும்.

இந்த நிலையில், ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்தியது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் எனக்கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதனால் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா–ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிராக நாங்கள் கடுமையாக செயல்படுவோம் என்ற தெளிவான செய்தியை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஈரான் எந்த நாட்டுடனும் போரை விரும்பவில்லை. ஆனால் ஈரானைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளது. தங்கள் நாட்டு ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. ஆனால் விமானம் ஈரானின் வான்பரப்பில் நுழையவில்லை, சர்வதேச நீர்பரப்புக்கு மேலே பறந்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Next Story