சுவிட்சர்லாந்தில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்


சுவிட்சர்லாந்தில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
x
தினத்தந்தி 26 Jun 2019 10:42 PM GMT (Updated: 26 Jun 2019 10:42 PM GMT)

சுவிட்சர்லாந்தில் கிண்ணம் ஒன்று ரூ.34 கோடிக்கு ஏலம் போனது.

பெர்ன்,

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

எனவே அதனை நல்ல விலைக்கு விற்க முடிவு செய்தனர். இதற்காக ஏலம் விடும் நிறுவனங்களை அவர்கள் அணுகியபோது, எந்த ஏல நிறுவனமும் அதனை விற்க முன்வரவில்லை. இதனால் அந்த கிண்ணத்தை விற்கும் முயற்சியை கைவிட்ட அவர்கள், அதனை வீட்டில் டென்னிஸ் பந்துகளை போட்டு வைக்க பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் அந்த தம்பதியின் வீட்டுக்கு சென்ற பிரபல ஓவியர் ஒருவர், அந்த வெண்கல கிண்ணத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்த கிண்ணம் 300 ஆண்டுகளுக்கு முன் சீன அரசர் ஒருவருக்காக உருவாக்கப்பட்டது என அவர் கூறினார்.

இதுபற்றி கேள்விப்பட்ட ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் அந்த தம்பதியிடம் இருந்து வெண்கல கிண்ணத்தை வாங்கியது. பின்னர், அதனை உடனடியாக ஹாங்காங் எடுத்துச்சென்று அங்கு ஏலம்விட்டது. இதில் அந்த கிண்ணம் 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரம்) ஏலம் போனது.

இத்தகவலை ‘கொல்லெர்’ ஏல நிறுவனம் படத்துடன் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Next Story