அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி


அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி
x
தினத்தந்தி 30 Jun 2019 10:45 PM GMT (Updated: 30 Jun 2019 8:01 PM GMT)

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் பலியாயினர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஜாய் கூப்பர் (வயது 28). இவர் விடுமுறையை கொண்டாட தனது நண்பர்களுடன் அலாஸ்கா மாகாணத்தின் கெனாய் தீபகற்பத்தில் உள்ள மூஸ் பாஸ் நகருக்கு சென்றார்.

அங்கிருந்து அவர்கள் ஊர் சுற்றிப்பார்க்க சிறிய ரக விமானத்தில் புறப்பட்டு சென்றனர். விமானத்தில் ஜாய் கூப்பர் உள்பட 4 பேர் இருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோரவிபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஜாய் கூப்பர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜாய் கூப்பரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story