பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது : வடகொரியா குற்றச்சாட்டு


பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது : வடகொரியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 July 2019 12:15 AM GMT (Updated: 4 July 2019 7:27 PM GMT)

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.

பியாங்காங், 

பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுதொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசினர். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

இதனால் அணு ஆயுத பயன்பாடு குறித்த, இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடங்கிப்போனது. இந்த சூழலில் அரசு முறை பயணமாக தென்கொரியா சென்ற டிரம்ப், கொரிய நாடுகளின் எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்து பேசினார்.

இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, வடகொரியா மண்ணில் கால் பதித்த முதல் தலைவர் என்ற பெருமையை டிரம்ப் பெற்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் அணு ஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா, பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும் அந்நாடு விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் இருப்பதாக வடகொரியா குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபைக்கான வடகொரியா தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி குறித்து 2017-ம் ஆண்டு எட்டப்பட்ட முடிவை வடகொரியா மீறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதை காரணம்காட்டி வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது.

அக்கடிதத்தில் உறுப்பினர் நாடுகளில் உள்ள இடம் பெயர்ந்து வாழும் வடகொரிய தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அழைப்பு விடுத்திருந்த அதே நாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடிதமும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும்.

இதன் மூலம் வட கொரியாவுடன் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு தான் அமெரிக்கா இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அதுவே நிதர்சனம். பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை காட்டிலும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்கிற எண்ணமே அமெரிக்காவுக்கு அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story