கனமழைக்கு 67 பேர் பலி; சர்வதேச அமைப்பின் உதவியை கோரியது நேபாளம்
நேபாளத்தில் கனமழையால் 67 பேர் பலியான நிலையில் சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.
காத்மண்டு,
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அந்நாட்டில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 10 ஆயிரத்து 385 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது. வெள்ளம் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மீட்டு பாதுகாப்பு நிறைந்த இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 67 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 32 பேரை காணவில்லை. 38 பேர் காயமடைந்து உள்ளனர். இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவித்த 1,445 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து நீர்சார்ந்த நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, ஹெபாடைடிஸ் ஏ மற்றும் இ போன்ற நோய்கள் பரவ கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். தொடர்மழையால் பாதிப்படைந்து உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு முறையான சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில், நீரால் பரவும் நோய்களை தடுப்பதற்கான சாத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.
Related Tags :
Next Story