கிரீஸ் நாட்டில் பரபரப்பு: தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்


கிரீஸ் நாட்டில் பரபரப்பு: தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்
x
தினத்தந்தி 16 July 2019 11:10 PM GMT (Updated: 16 July 2019 11:10 PM GMT)

கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி விமானங்கள் தரையிறங்கும்போது, விமான என்ஜின்களில் இருந்து வெளிப்படும் வேக காற்றினால் சுற்றுலா பயணிகள் தூக்கி வீசப்பட்டு காயமடையவோ, உயிரிழக்கவோ நேரிடும் என்பதால் ஓடுதளத்தின் முன்பாக ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தின் ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஸ்கியாதோஸ் விமான நிலையத்துக்கு வந்தது.

இந்த விமானம் ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக வழக்கத்தை விட தாழ்வாக பறந்து வந்தது. அதாவது கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தலையை உரசும் அளவுக்கு விமானம் தாழ்வாக பறந்தது.

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் வழக்கம் போல விமானத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். விமானம் மிகவும் தாழ்வாக பறந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story