மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது -டிரம்ப் கருத்து


மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது -டிரம்ப் கருத்து
x
தினத்தந்தி 17 July 2019 5:24 PM GMT (Updated: 17 July 2019 5:24 PM GMT)

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் கைது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்டார். ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹபீஸ் சையீத் கைது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில், “மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பத்து ஆண்டுகள் தேடுதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கண்டறிந்து கைது செய்ய, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story