குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச கோர்ட் தீர்ப்பு குறித்து ஜெய்சங்கர் இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை


குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச கோர்ட் தீர்ப்பு குறித்து  ஜெய்சங்கர் இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை
x
தினத்தந்தி 18 July 2019 3:34 AM GMT (Updated: 18 July 2019 3:34 AM GMT)

குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை அளிக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49). இவர் இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரி என்றும், தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்தார் என்றும் பாகிஸ்தான் அபாண்டமாக பழி சுமத்தி, 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் 3-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு 22 நாட்கள் கழித்து தெரிவித்தது.

ஆனால் குல்பூஷண் ஜாதவ், இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி, ஈரானில் வர்த்தகம் செய்து வந்தார்; அவரை பாகிஸ்தான் ஏஜெண்டுகள் கடத்தி வந்து இந்த பழியை அபாண்டமாக சுமத்துகின்றனர் என இந்தியா கூறியது. இருப்பினும் குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கை பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு அவசர கோலத்தில் விசாரித்து, அவருக்கு மரண தண்டனை விதித்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பால் அதிர்ந்து போன இந்தியா, அதே ஆண்டின் மே மாதம் 8-ந்தேதி, நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டை நாடியது. சர்வதேச கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று (ஜூலை 17) தீர்ப்பளிக்கப்பட்டது.  

சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து நேற்று அதிரடி தீர்ப்பு அளித்தனர். மேலும், அவர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர்.  சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை இந்தியா வரவேற்றது. 

இந்த நிலையில், குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளார். 

Next Story