துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை


துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை
x
தினத்தந்தி 19 July 2019 11:15 PM GMT (Updated: 19 July 2019 8:44 PM GMT)

துருக்கி விமான நிலையத்தில், முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இஸ்தான்புல்,

துருக்கியின் இஸ்தான்புல் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதற்காக அங்குள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அவர் தனது விமான டிக்கெட்டை அதிகாரிகளிடம் காட்டி விமான நிலையத்துக்குள் நுழைந்தார். பின்னர் அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் அந்த பெண் வைத்திருந்த உடைமைகளை வாங்கி, ‘பேக்’ செய்து ‘கன்வேயர் பெல்ட்’ வழியாக அனுப்பினர்.

மேலும் அந்த பெண்ணிடம் “உங்கள் உடைமைகள் நீங்கள் செல்லும் விமானத்துக்கு வந்துசேரும்” என ஊழியர்கள் கூறினர். அதை கேட்ட அந்த பெண் கன்வேயர் பெல்ட் தன்னையும் விமானத்தில் கொண்டு சேர்த்துவிடும் என நினைத்து அதில் ஏறினார்.

இதனை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ந்துபோயினர். என்ன நடக்கிறது என்று அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த பெண் கன்வேயர் பெல்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக விமான ஊழியர்கள் அவரை மீட்டனர்.

இளம்பெண்ணின் இந்த வினோத செயல் விமான நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவர் கன்வேயர் பெல்ட்டில் ஏறி, தடுமாறி விழும் காட்சிகள் விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story