சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்


சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 8:53 PM GMT)

சீனாவில் பேஸ் ஆப் செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.

பீஜிங்,

சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக்காட்டும் ‘பேஸ் ஆப்’ எனும் செயலிக்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை வரவேற்பு பெருகிவருகிறது.

இந்நிலையில், சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

குவாங்டாங் மாகாணம் ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகனான யு வீபெங், 2001-ம் ஆண்டு மே மாதம் காணாமல் போனான். விசாரணையில் அவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இணையத்தில் வைரல் ஆகிவரும் ‘பேஸ் ஆப்’ செயலி மூலம், 3 வயதில் கடத்தப்பட்ட தங்களது மகனை கண்டறிய அவரது பெற்றோர் முடிவெடுத்தனர்.

அதன்படி சிறுவயதில் எடுக்கப்பட்ட யு வீபெங்கின் புகைப்படங்கள் பலவற்றை தற்போதைய உருவத்திற்கு மாற்றி, போலீஸ் உதவியுடன் தேடினர். போலீசாரின் தீவிர முயற்சியில் யு வீபெங் கண்டுபிடிக்கப்பட்டார்.

போலீசார் அவரை அணுகி விவரத்தை எடுத்து கூறியபோது யு வீபெங் அதனை நம்பவில்லை. அதன் பிறகு அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் அவர்தான் யு வீபெங் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைந்தார்.

Next Story