அமெரிக்காவில் டிரம்ப்-இம்ரான்கான் சந்திப்பு : இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த உறுதி


அமெரிக்காவில் டிரம்ப்-இம்ரான்கான் சந்திப்பு : இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த உறுதி
x
தினத்தந்தி 23 July 2019 11:30 PM GMT (Updated: 23 July 2019 8:11 PM GMT)

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த தலைவர்கள் இருவரும் உறுதி பூண்டனர்.

வாஷிங்டன், 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சிக்கன நடவடிக்கையாக அவர் பயணிகள் விமானத்தில் அமெரிக்கா சென்றார். மேலும் அவர் அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்காமல் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்தில் தங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்பை இம்ரான்கான் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போர், பிராந்திய ஸ்திரதன்மைக்கு சவாலாக இருக்கும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் நீண்ட ஆலோசனை நடத்தினர்.

முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர். அதேபோல் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இருவரும் ஒப்புதல் அளித்தனர்.

எனினும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பது குறித்து இந்த சந்திப்பின்போது எந்தவித ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இம்ரான்கான் உடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறுகையில் ‘‘மிகவும் பிரபலமான, அதே வேளையில் புகழ்பெற்ற விளையாட்டு வீரரும், சிறப்பு மிக்க பிரதமருமான இம்ரான்கானை சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்’’ என்றார்.

அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போர் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்து பேசியதாவது:–

கடந்த 2 வாரங்களில் நாங்கள் இந்த விவகாரத்தில் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். இதில் பாகிஸ்தான் எங்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் செப்டம்பர் பிற்பகுதியில் தலீபான்களுடன் அரசியல் ரீதியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா அழுத்தத்தை கொடுக்கும்.

இதுவே நீண்ட நாள் போரை முடிப்பதற்கான சிறந்த வழி. நாங்கள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட விரும்பினால் ஒருவாரத்தில் அந்தப் போரில் வெற்றி பெற்று விடுவோம். ஆனால் சுமார் ஒரு கோடி மக்கள் பலியாகிவிடுவார்கள். அமெரிக்கா அதை விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story