இங்கிலாந்தில் கெட்டு போன சாண்ட்விச் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு


இங்கிலாந்தில் கெட்டு போன சாண்ட்விச் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 Aug 2019 3:48 PM GMT (Updated: 1 Aug 2019 3:48 PM GMT)

இங்கிலாந்தில் கெட்டு போன சாண்ட்விச் சாப்பிட்டதில் லிஸ்டீரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டு பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் மேற்கத்திய கலாசாரத்தின்படி, சாண்ட்விச்சுகள், சாலட்டுகள், பிரட் துண்டுகள் ஆகியவற்றை தங்களது அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்கின்றனர்.

பிரட் துண்டுகள், தக்காளி, வெங்காயம், கோஸ் மற்றும் இறைச்சி துண்டுகளை வைத்து இந்த சாண்ட்விச் தயாரிக்கப்படுகிறது.  சாண்ட்விச் போன்ற சில உணவு பொருட்கள் சிறிய பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.  அவற்றை வாங்கி மக்கள் உண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு சாண்ட்விச் சாப்பிட்டதில் 9 பேருக்கு லிஸ்டீரியாசிஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், சஸ்செக்ஸ் மருத்துவமனையில் ஒருவர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

லிஸ்டீரியா என்ற பாக்டீரியாவானது சமைக்கப்பட்ட இறைச்சிகள், மீன், சாண்ட்விச்கள் மற்றும் சாலட்டுகள் ஆகியவற்றை கெட்டு போக செய்ய கூடியவை.

எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்களான, கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தைகள், பிறந்த புதிய குழந்தைகள் மற்றும் முதியோர் போன்றோருக்கு இந்த வியாதியானது தீவிர பாதிப்பினை ஏற்படுத்தி உயிரிழக்க செய்யும்.

இந்த சாண்ட்விச்சுகளை குட்புட் செயின் என்ற நிறுவனம் வினியோகித்து வந்துள்ளது.  இந்த நிறுவனம் வினியோகித்த சாண்ட்விச்சால் மான்செஸ்டர், லிவர்பூல், லீசெஸ்டர் மற்றும் டெர்பை ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

Next Story