கனடா பிரதமர் சட்டத்தை மீறினார் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு அறிக்கை


கனடா பிரதமர் சட்டத்தை மீறினார் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு அறிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2019 9:30 PM GMT (Updated: 15 Aug 2019 6:05 PM GMT)

கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லவாலின் என்கிற நிறுவனம் உலகின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஒட்டாவா, 

கனடாவை சேர்ந்த எஸ்.என்.சி. லவாலின் என்கிற நிறுவனம் உலகின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிகிறார்கள். எஸ்.என்.சி. லவாலின் நிறுவனம் லிபியாவில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது என குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து கனடா ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எஸ்.என்.சி. லவாலின் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாகவும், அந்த நிறுவனத்துக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், எஸ்.என்.சி. லவாலின் விவகாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ சட்டத்தை மீறினார் என அந்நாட்டின் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த குழுவின் ஆணையர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “எஸ்.என்.சி. லவாலின் நிறுவனத்துக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை நிறுத்தும்படி முன்னாள் அட்டார்னி ஜெனரலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழுத்தம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெறிமுறைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். எனினும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிரான இந்த கருத்து அக்டோபர் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.

Next Story