காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம் என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநித் கூறினார்.
நியூயார்க்,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 9 ந் தேதி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று ஆதரவு கோரினார். தங்களது நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, காஷ்மீர் விவகாரம் பற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் சீனா கோரிக்கை விடுத்தது. இதன்படி, ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூடிய அறைக்குள் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இதனால், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனம் பெற முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐநாவுக்கான இந்தியா தூதர் சையது அக்பரூதின் கூறியதாவது:- “ ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீரில் அபாயகரமான சூழல் இருப்பதாக சிலர் தங்கள் கருத்தை சர்வதேச நாடுகளின் கருத்தாக எதிரொலிக்கச் செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள்.
வருமுன் காப்பதே சிறந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் நாங்கள் கட்டுப்பாடுகள் விதித்தோம். ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும்” இவ்வாறு அவர் கூறினார்