கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க எண்ணிய அமெரிக்க அதிபர்; மறுக்கும் டென்மார்க்


கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க எண்ணிய அமெரிக்க அதிபர்; மறுக்கும் டென்மார்க்
x
தினத்தந்தி 17 Aug 2019 12:23 PM GMT (Updated: 17 Aug 2019 12:23 PM GMT)

கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய அதிபர் டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோமன்ஹகன்,

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.

இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் கிரீன் லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புகிறார். அது குறித்து தனது ஆலோசகர்களுடன் விவாதித்தார். வருகிற செப்டம்பர் 2 மற்றும் 3-ந்தேதிகளில் அவர் டென்மார்க்கில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

அப்போது டென்மார்க் பிரதமர் மெட்டி பெரி டெரிக்சனை சந்தித்து கிரீன்லேண்ட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது.

இதை டென்மார்க் மறுத்துள்ளது. கிரீன்லேண்ட் தீவை விற்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. விற்பனை செய்வதாக இருந்தால் வெளிப்படையாக தெரிவிப்போம் என கிரீன்லேண்ட் தீவின் வெளியுறவு மந்திரி ஆனி லோன பேக்கர் தெரிவித்துள்ளார்.

கிரீன்லேண்ட் தீவு விற்பனை செய்யப்படுவதாக கூறுவது ஏப்ரல் தின முட்டாள் ஜோக் என டென்மார்க் முன்னாள் பிரதமர் லார்ஸ் லோக்கி ராஸ்முஸ்சென் கூறியுள்ளார்.

இந்த தீவை விலைக்கு வாங்க விரும்புவதன் மூலம் கிரீன்லேண்ட் தீவில் வாழும் 50 ஆயிரம் குடிமக்களை டென்மார்க் தன்னிடம் விற்று விடும் என அமெரிகா நினைப்பது முற்றிலும் கொடூரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story