ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்; 20க்கும் மேற்பட்டோர் பலி
ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மேடையில் இசை கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்து கொண்டிருந்தபொழுது, திடீரென மேடையருகே வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.
இதில் இளைஞர்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து உள்ளனர். எனினும், அதிகாரப்பூர்வ தகவலை அதிகாரிகள் இன்று வெளியிடலாம் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருடத்தின் மிக கொடூர தாக்குதலாக இது இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 7ந்தேதி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையை இலக்காக கொண்டு நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 145 பேர் காயமடைந்தனர்.
Related Tags :
Next Story