அமெரிக்கா ஏவுகணை சோதனை - ரஷியா கண்டனம்


அமெரிக்கா ஏவுகணை சோதனை - ரஷியா கண்டனம்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 8:20 PM GMT)

அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனைக்கு, ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு அமெரிக்கா சோவியத் ரஷியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது.

ரஷியா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா கடந்த மாதம் ரஷியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா நேற்று முன்தினம் சோதித்தது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கலிபோர்னியா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீ தொலைவுக்கு பறந்து அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், “சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் இந்த சோதனையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் பாதுகாப்பு துறையின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை “ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்” என கூறி ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story