அமெரிக்காவின் ஏவுகணை பரிசோதனை: ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று விவாதம்


அமெரிக்காவின் ஏவுகணை பரிசோதனை: ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று விவாதம்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:29 AM GMT (Updated: 22 Aug 2019 4:29 AM GMT)

அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்து இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.

வாஷிங்டன்,

பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு அமெரிக்கா சோவியத் ரஷியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது.

ரஷியா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா கடந்த மாதம் ரஷியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை கடந்த 19 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்று அமெரிக்கா சோதித்தது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் “கலிபோர்னியா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீ. தொலைவுக்கு பறந்து அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது” என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை “ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்” என கூறி ரஷியா கண்டனம் தெரிவித்தது. மேலும் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் முன்பாகவே அமெரிக்கா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

இதனையடுத்து இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், ‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள்’ என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது. இதில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்தும், எதிர்காலத்தில் இத்தகைய ஏவுகணைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story